கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் கைவிடப்பட்ட வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் யாழ்.சங்கானையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற இவ் வெடிப்புச் சம்பவத்தில், கிளிநொச்சியில் உள்ள ஐ.நா தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் தியாகராஜா யோகசீலன் என்ற 29 வயதுடைய இளைஞனே காயமடைந்தவராவார்.
வெடித்துச் சிதறிய துண்டுகள் பாய்ந்ததில் இரண்டு தொடைகளிலும் காயமடைந்து இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த இளைஞன், தான் வசித்து வருகின்ற வீட்டின் முற்றத்தைக் துப்பரவு செய்து குப்பைகளை எரித்தபோது, குப்பையுடன் கிடந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்தனாலேயே இவர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கனகாம்பிகைக்குளம் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அந்தப் பிரதேசம் பாதுகாப்பானது என அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.