>

A Beautiful Mind - திரைவிமர்சனம்

Sylvia Nasar எழுதிய “A Beautiful Mind” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த  திரைப்படம், ஜான் நாஷ் என்ற பிரபலமான  நோபல் பரிசு பெற்ற கணித  மேதையின் வாழ்க்கை பற்றிய  உண்மை கதை. Ron Howard இயக்கிய இத்திரைப்படத்தில் Russell Crowe(John Nash) , Jennifer Connelly(Alicia Nash), Ed Harris (Parcher), Christopher Plummer(Dr. Rosen) மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 8 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கபட்டு 4ஆஸ்கார் அவார்ட்ஸ்-ஐ(சிறந்த நடிகை - Jennifer Connelly, சிறந்த இயக்குனர் - Ron Howard, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை - Akiva Goldsman) அள்ளியது. IMDB டாப் 250-யில் 205-வது  இடத்தையும் பிடித்துள்ளது.
பல நல்ல படங்களை இயக்கியுள்ள Ron Howard சாதனையாளர் ஆஸ்கார் விருதுக்கு( இயக்கம் ) பரிந்துரைக்கபட்டவர். அதில் முக்கியமானவை the Andy Griffith show, American Graffiti,  Da Vinci code, Cinderella Man etc.. படத்தின் ஹைலைட் Russel crowe-வின் நடிப்பு என்று தான் சொல்லவேண்டும். அவருக்கு ஒரு ஆஸ்கார் கொடுத்திருக்கலாம்!!!!! ஒருவேளை அதற்கு முந்தின வருடம் வந்த (Gladiator) -காக அவர் ஆஸ்கார் வென்றதால் கொடுக்கவில்லையோ என்னவோ??? எப்படி Gladiator படத்தில் நடித்துவிட்டு அவரால் இந்த படத்தில் இப்படி ஒரு கெட்அப்  போட முடிந்ததோ தெரியவில்லை. பிரமிப்பாக உள்ளது!!!! படத்தின் நாயகி Jennifer Connelly மிக பிரபலமான நடிகை மட்டும் அல்ல, பல ஹிட் படங்களை தந்திருப்பவர். அதில் சில Requiem for a Dream (இந்தப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்), Blood diamond, Hulk etc.. 
படத்தின் கதை என்ன?  மனம் ஒரு அற்புதமான விஷயம். அது தான் நம் அனைவரின் மனிதத்தன்மை மற்றும் நமது தனித்துவ தனித்தன்மைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றது.அந்த மனமே  நமக்கு எதிராக செயல்பட்டால்? அல்லது பொய்யை உண்மை என நமக்கு நாமே நம்பசெய்தால்? இதைப்போன்ற ஒரு பிரச்சினையுடன் இருக்கும் ஒரு மனிதர், அதை சந்தித்து, வென்று எப்படி நோபல் பரிசு வென்றார் என்பது தான் கதை. ஜான் நாஷின் வாழ்க்கை சரித்திரம். அவர் வாழ்கையின் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் எப்படி ஒரு கணித மேதையாக சாதித்தார் என்பதே ஆகும். மெலோ டிராமா என்று அழைக்கப்படும் மிக பொறுமையான திரைக்கதை. மெதுவாக நகரும் கதை என்பதால் சண்டை படம் மற்றும் விறுவிறுப்பான படம் பார்பவர்களுக்கு பிடிக்குமா என்பது சிறிது சந்தேகமே!!!. இருந்தாலும் தெளிந்த நீரோடை போல பயணிக்கும் இத்திரைப்படம் ரஸ்ஸல் க்ரோவின் நடிப்பு, அற்புதமான ஒளிப்பதிவு போன்றவற்றிற்காக கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.
ஜான் ஒரு கணித மேதை, அவனுக்கு வாழ்க்கையில் உள்ள அனைத்து சம்பவங்களையும் எண்கள் மூலம் மட்டுமே பார்க்கத்தெரியும், அனைத்தையும் கணித சமன்பாடுகள் மூலம் சமன் செய்வது தான் அவனின் பொழுதுப்போக்கு. Princeton University யில் படிக்கும் ஜான், இறுதி ஆண்டில் முடிக்க வேண்டிய அசைன்மென்ட்-காக புதிதாக ஏதேனும் கண்டுடிபிக்க முயற்சிக்கிறான். அவனின் அறையில் ஒன்றாக தங்கி இருக்கும் சார்லஸ் என்பவன் அவனுடைய நண்பனாகிறான். தற்செயலாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்  போது Governing Dynamics என்ற தலைப்பில் ஒரு புதிய கான்செப்ட்-ஐ கண்டுப்பிடித்து வெளியிடுகிறான். அதன் விளைவாக அவனுக்கு MIT ( Massachusetts Institute Of Tech) யில் ஒரு வேலை கிடைகிறது. அங்கே மாணவியாக படிக்கும் அலிஷியா என்பவளுடன் காதல் மலர்கிறது.
சில ஆண்டுகளுக்கு பிறகு, பார்ச்சர் என்ற அதிகாரி பெண்டகன் (Pentagon)-யில் இருந்து ஜானை அழைத்து, தொலை தொடர்பு கம்பிகளில் உள்ள கோடு (Codes) ஐ உடைத்து ,  அதில் வரும் ரகசியங்களை மறையாக்குதல்(Encrypt) செய்து தருமாறு கூறுகிறார். சில நொடிகளில் கோடை(Codes) உடைக்கும்  ஜானுக்கு இந்த வேலை மிகவும் பிடித்து போக தன் முழு நேரத்தையும் இதில் செலவிடுகிறான். சில நாட்களுக்கு பின்னர் தன் நண்பனான சார்லஸ் மற்றும் அவனின் தங்கை மகளான மார்சி என்னும் சிறு பெண்ணை சந்திக்கிறான். அவனிடம் தான் அலிஷியாவை திருமணம் செய்யபோவதாக கூறுகிறான். அதன் பின்னர் திருமணமும் செய்துக்கொள்கிறான்.
ஒரு நாள் இரவில் ரகசிய கோடுகளை என்க்ரிப்ட் செய்து அதை போஸ்ட் பாக்ஸ்-ல் போட வரும் போது, சோவித் எதிரிகள் தாக்குகின்றனர். அவர்களை துப்பாகியால் சுட்டு ஜானை காப்பாற்றுகிறான் பார்ச்சர். பயந்து போகும் ஜான் தனக்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு வீட்டிற்கு  திரும்புகிறான்.  மறு நாள் ஒரு கல்லூரியில் லெக்சர் கொடுதுக்கொண்டிருக்கும்போது  சில சோவித் ஆட்கள் ரோசென் தலைமையில் ,ஜானை தாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்ப்பிஒடுகிறான் ஜான். ரோசென் அவனிடம் இருந்து ரகசியங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறான் என்றும் நம்புகிறான்.
ஆனால் உண்மையில் ரோசென் என்பவர் ஒரு மனநிலை மருத்துவர். அவர் அலிஷியாவிடம் ஜான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான் என்றும் அவன் சில உருவங்களை மனதில் கற்பனை செய்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்றும் சொல்கிறார். அதிர்ந்து போகும் அலிஷியா ஜானுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?  ஜான் எத்தனை மனிதர்களை கற்பனை செய்துகொண்டு இருந்தான்? அவன் குணமானானா? ஒரு மனநிலை பாதிக்கபட்டவன் எப்படி ஒரு பெரிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆனார்? இதற்கான விடைகளை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள். 
முதல் காட்சியில் சில நண்பர்கள்  ஜானை  செஸ்  விளையாட  அழைப்பார்கள், ஆட்டத்தில்  முதல் காயை  ஜான்  நகர்த்துவான். ஆனால்  அந்த  ஆட்டத்தில்  அவன்  தோற்றுவிடுவான். முடிவில் , இந்த  ஆட்டம் நேர்மையானது இல்லை, ஏமாற்றி விளையாடப்பட்டது என்றும்  , ஆட்டத்தின்  தொடக்கத்தில்  முதல் காயை  தான்  தான்  நகர்த்தியதாகவும்  அப்படி இருக்க   தான்  ஜெயித்திருக்க  வேண்டும்  என்று  சொல்வான் . இந்த சம்பவமே அவன் “Game Theory” எனும் புதிய படைப்பிற்கு  காரணமாக அமையும்.
ஜான் குணமடைந்து  விட்டதாக நம்பி குழந்தையை குளிக்கவைக்க சொல்வாள் அலிஷியா. குழந்தையை பாத் டப்பில் உட்காரவைத்துவிட்டு  கற்பனை  நண்பனை  குளிக்க வைக்க சொல்லிவிட்டு வேறு வேலை செய்துக்கொண்டிருப்பான் ஜான். பாத் டப்பில் தண்ணீர் நிரம்பிகொண்டிருக்கும். குழந்தை மூழ்கும் நிலையில் அலிஷியா குழந்தையை காப்பாற்றுவாள். மிக இயல்பாக இருக்கும் இந்த காட்சியை எப்படி கை குழந்தையை வைத்து இயக்கினார்களோ. பார்கவே நெஞ்சம் படபடத்தது.
ஜான் கல்லூரியில் படிக்கும் பொது ஒரு சமயம் நூலகத்தில்  ஒரு வயதான பேராசிரியர் புத்தகம் படித்து கொண்டிருப்பார். அப்பொழுது மற்ற பேராசிரியர்கள் தங்கள் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து அவர் அமர்ந்திருக்கும் டேபிள் மேல் வைப்பார்கள். எதற்கு என்று புரியாத ஜான் அதை பற்றி கேட்கும் பொது, அந்த பேராசிரியர் செய்த சாதனைக்காக என்பது தெரியவரும். படத்தின் இறுதி காட்சியில் ஜானின் டேபிள் மற்ற பேராசிரியர்களின் பேனாவால் நிறைந்திருக்கும். இதயத்தை வருடும் இந்த அற்புத காட்சி.
கதையில் வரும் ஜான் கற்பனை செய்துக்கொள்ளும் மனிதர்களை பார்க்கவும் முடியும், பழகவும் முடியும். ஆனால் நிஜ ஜான் கற்பனை செய்த மனிதர்கள் பேசுவதை மட்டுமே கேட்பாரே தவிர அவர்களை விசுவலாக(Visual) கற்பனை செய்யவில்லையாம்.
படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை. ஒரு அழகான கவிதை போன்ற இந்த திரைப்படத்தை நீங்க மிஸ் பண்ணாம  பாருங்க. Russel Crowe -வின் நடிப்புக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இந்தப்படம் நமது மனதையும் , உணர்வையும் அப்படியே ஆக்கிரமித்துவிடும்.

 
-