நிலவில் கால்பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்
"அவர் வாழ்ந்த காலத்தில் பார்க்கையில் மட்டுமல்லாமல் எக்காலத்துக்குமே
மாபெரும் அமெரிக்க நாயகன் தான்" என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழஞ்சலி
செலுத்தியுள்ளார்.
82 வயதான ஆம்ஸ்டிராங், தனக்கு நடந்த இறுதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்து காலமானார்.1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 என்ற சரித்திர சிறப்பு மிக்க விண்வெளிப் பயணத்தில் ஆம்ஸ்டிராங்குடன் நிலவில் கால்பதித்திருந்த பஸ் அல்ட்ரின், ஆம்ஸ்டிராங் ஒரு மிகச் சிறப்பான விண்வெளி விமானி என்றும் அணியின் கட்டளைத் தலைவர் என்றும் கூறினார்.
நீல் ஆம்ஸ்டிராங் வெளிப்படுத்திய சேவை, சாதனை, எளிமை ஆகியவற்றை அமெரிக்கர்கள் மதித்துப் பின்பற்ற வேண்டும் என அவரது குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"அடுத்த தடவை வானம் தெளிவாக இருக்கும் ஒரு இரவுப் பொழுதில் நீங்கள் வெளியே போகையில் நிலவைப் பார்க்கும்போது, நீல் ஆம்ஸ்டிராங்கை ஒரு முறை மனதில் நினைத்து கண் சிமிட்டுங்கள்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆம்ஸ்டிராங் தலைமையில் சென்ற அப்போலோ 11 விண்வெளி ஓடம் 1969ல் ஜூலையில் நிலவில் தரையிறங்கியது. அக்கலத்திலிருந்து நிலவில் முதலில் கால்பதித்தவர் ஆம்ஸ்டிராங்தான்தான் எடுத்துவைத்த அந்த சிறிய காலடி, மனித குலத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பிரம்மாண்ட முன்னேற்றம் என்பதை "a giant leap for mankind" என ஆம்ஸ்டிராங் கூறியது ஆங்கில மொழியின் மிகப் பிரபலமான சொற்றொடர்களில் ஒன்றாகியது.
விண்வெளி திட்டங்களில் சேருவடற்கு முன் நீல் ஆம்ஸ்டிராங் போர் விமானியாக இருந்து கொரியாவுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்றிருந்தார்.
1971ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் விமான - விண்வெளி பொயிறியல் கல்வி ஆசிரியராக வேலை பார்த்துவந்தார்.
ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்து விலகி வாழ்வதை அவர் விரும்பியிருந்தார்.